Sunday 26 October 2014

மகாகவி பாரதி

மகாகவி பாரதி

(  தோற்றம்  11-12-1882--மறைவு 12-9-1921 )
1.

அக்னிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை  வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

2. காற்று


காற்றே வா, மெதுவாக வா

ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே

காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே

அலமாரிப்புத்தகங்களைக் கீழே தள்ளி விடாதே

பார்த்தாயா இதோ தள்ளி விட்டாய்

புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து விட்டாய்

மறுபடி மழையைக் கொண்டு வந்து சேர்த்தாய்


வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை

பார்ப்பதிலே நீ மகாசமர்த்தன்

நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை

நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர்

நொய்ந்த உள்ளம் இவற்றைக் காற்றுத்தேவன் புடைத்து

நொறுக்கி விடுவான்

சொன்னாலும் கேட்க மாட்டான்


ஆதலால் மானிடரே வாருங்கள்

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்

கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்

உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்

உயிரை வலிமையுற நிறுத்துவோம்

உள்ளத்தை உறுதி செய்வோம்

இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி விடுவான்

காற்று மெலிய தீயை அவித்து விடுவான்

வலிய தீயை வளர்ப்பான்


அவன் தோழமை நன்று

அவனை நித்தமும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment